திருவலம், டிச.17: தமிழகத்தில் 528 பேரூராட்சிகளில் 10 ஆண்டிற்கும் மேலாக பணிபுரியும் கணினி ஆபரேட்டர்கள் பணி நிரந்தரம் ஆகுமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். தமிழகத்தில் உள்ள 528 பேரூராட்சிகளில் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு கணினி வசதி ஏற்படுத்தப்பட்டது. இதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தினக்கூலி அடிப்படையில் கணினி ஆபரேட்டர்கள் பணியில் சேர்க்கப்பட்டனர். ஓரிரு ஆண்டுகளில் பணி நிரந்தரம் கிடைத்து விடும் என்று நம்பியவர்களுக்கு தற்போது வரை அந்த நம்பிக்கை ஏமாற்றமாகவே உள்ளது. மேலும் பேரூராட்சிகளில் ஆன்லைன் மூலம் வரி மற்றும வரியில்லா இனங்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவு, பிளான் அப்ரூவல், டெண்டர், தினசரி திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிகள் போன்ற பல்வேறு பணிகளை இன்டர்நெட் மூலம் தகவல்கள் உயர்அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
தற்போது பேரூராட்சியில் அனைத்து அலுவலக பணிகளும் கணினி மூலமாகவே இயக்கப்பட்டு வருகிறது. எனவே கணினி ஆபரேட்டர்களுக்கு பணிச்சுமையும் அதிகரித்துள்ளது. ஆனால் தினக்கூலி அடிப்படையிலேயே பணியாற்ற வேண்டியுள்ளது. அவ்வாறு பணியாற்றுபவர்களுக்கு தினக்கூலியை தவிர அரசின் எந்தவித சலுகையும் வழங்கப்படுவதில்லை. இதற்கிடையே கடந்த 2017ம் ஆண்டு 528 பேரூராட்சிகளில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து பணியாற்றியவர்களின், கல்வி தகுதி மற்றும் கூடுதல் விவரங்கள் சரிபார்க்கப்பட்டது. ஆனால், இதுநாள் வரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் 528 பேரூராட்சிகளின் கணினி ஆபரேட்டர்கள் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் விதமாக, பணி நிரந்தர ஆணையை தமிழக அரசு விரைவில் பிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் கணினி ஆபரேட்டர்கள் உள்ளனர்.